திருப்பதி லட்டு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
திருப்பதி லட்டின் வயது 308; லட்டுக்கு முன் வடை முக்கிய பிரசாதமாக இருந்தது!
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும், லட்டின் வயது, 308 வருடங்கள் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக படைக்கப்படுவது லட்டு.
இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை, குறிப்பிட்ட அளவில், அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில் வைக்கப்படும்.
இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு, 1715ம் ஆண்டு, ஆக., 2ல், துவக்கப்பட்டது.
இந்நிலையில், லட்டு பிரசாதத்திற்கு, நாளை (ஆக.,3), 308 வயதாகிறது. கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.
லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு, மாதம், 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
லட்டு படைத்ததற்கு முன், திருமலை ஏழுமலையானுக்கு, வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது.
திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கோவில் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டுதான். திருப்பதி போய்விட்டு வருபவர்கள் லட்டு இல்லாமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டார்கள்.
திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி ஏழுமலையானின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
திருமலையில் சம்பங்கி பிரதாக்ஷணம் என்னும் இடத்தில் ‘ஸ்ரீவாரி பிரசாதம்’ என்றும், ‘லட்டு பிரசாதம்’ என்றும் அழைக்கப்படும் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு, பிரத்யேகமாக ஒரு மடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த மடப்பள்ளி ‘பொடு’ என்று அழைக்கப்படும். சுமார் 200 பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 2.80 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப் படுகிறது. திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் விழாக்காலங்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுக்களை செய்யும் திறன் கொண்டதாக லட்டு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, எம்பெருமான் ஏழுமலையான் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு, சிறிய லட்டு ஒன்றும் தேவஸ்தானத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. லட்டுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருளான ‘பூந்தி’யை தயாரிக்க ‘தெர்மல் ஸ்டவ்’ எனப்படும் 40-க்கும் அதிகமான அதிநவீன அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. 750 கிராம் எடையிலான பெரிய லட்டு மற்றும் 175 கிராம் எடையிலான சிறிய லட்டுவும் தயார்செய்யப்பட்டு பக்தர்களுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது.
திருப்பதி லட்டு பிரசாத்தை அறிமுகப் படுத்தியவர் யார்?
திருப்பதி ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜை செய்ய வழங்கி வந்தவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். இவர்கள் தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதமாக்கியவர்கள் என்று சொல்லப்படுகிறது.
‘கல்யாணம் ஐயங்கார்' என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன். பூதேரி கிராமத்திலிருந்து தன் உறவினர்களுடன் திருமலையில் தங்கி திருமலை வெங்கடேஷ பெருமாளுக்கு குடும்பத்துடன் கைங்கரியம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
ஒரு நாள் பெருங்செல்வம் படைத்த வியாபாரி, தன் வேண்டுதலை நிறைவேற்றி வைத்தால் ஏழுமலையானுக்கு மலை போன்று பிரமாண்டமான லட்டு தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டி கொண்டாராம். அவருடைய வேண்டுதலை பெருமாள் நிறைவேற்றினார். அவர் சொன்னபடி பெரிய லட்டு செய்து இறைவனுக்கு வழங்கினார். லட்டு பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊதியமாக லட்டுகளே தரப்பட்டன. முன்னர் மிராசுதார்கள் லட்டு செய்யும் பணியை மேற்கொண்டனர். 1996ம் ஆண்டில் மிராசுதார்களின் உரிமையை நீக்கிவிட்டு தேவஸ்தானமே லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஒரு லட்டு தயாரிக்கவே 51 பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இத்தனை பொருட்கள் பயன்படுத்துவதால் மட்டுமே திருப்பதி லட்டின் சுவை தூக்கலாக இருக்கிறது. 5,100 லட்டுகள் தயாரிக்க மட்டுமே 852.5 கிலோ பொருட்கள் பயன்படுத்துகின்றனர்.
லட்டு தயாரிக்க கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை லட்டு தயாரிக்க பயன்படுத்தபடும் மூலப்பொருட்கள். நாள் ஒன்றுக்கு கடலை மாவு சுமார் 10 டன், சர்க்கரை 10 டன், முந்திரி 700 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, நெய் 300 முதல் 500 லிட்டர், கற்கண்டு 500 கிலோ, காய்ந்த திராட்சை 540 கிலோ மூலப்பொருட்களாக லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ் தானத்தால் இந்த பொருட்களுக்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
பூந்தியை கோயிலுக்கு உள்ளே எடுத்துச் செல்வதற்கும், தயாரிப்பு கூடத்திலிருந்து லட்டுகளை கவுன்ட்டர்களுக்கு கொண்டு செல்வதற்கும் கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய், பிரத்யேகக் குழாய் மூலம் கோயிலுக்கு வெளியிலிருந்து உள்ளேயும், கோயிலுக்கு வெளியே உள்ள பூந்தி தயாரிப்புக் கூடத்துக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.
திருப்பதியில் 3 வகையான லட்டுகள் செய்யப்படுகின்றன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு என்ற 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகிறது.
ஆஸ்தான லட்டு
முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப் படுகிறது. இது 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
கல்யாண உற்சவ லட்டு
கல்யான உற்சவ லட்டுக்கள் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.
புரோகிதம் லட்டு
புரோகிதம் லட்டு பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக் கப்படுகிறது. மூன்றுவகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள் தான் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
திருப்பதி லட்டு பிரசாதம் வரலாறு!!
திருப்பதி கோயிலில் லட்டு வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. திருப்பதியில் கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.
1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியிலிருந்து ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருப்பதியில் முதலில் பிரசாதமாக அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. இவை அனைத்தும் விரைவில் கெட்டுப்போக கூடியவை என்பதற்காக கடந்த 1803ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு உதிரியாக பூந்தி வழங்கப்பட்டு வந்தது. முன்னர், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே முழு லட்டு வழங்கும் நடைமுறை இருந்தது.
1940-ம் ஆண்டிலிருந்துதான் பக்தர்கள் அனைவருக்கும் பூந்திக்குப் பதிலாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை லட்டுதான் பிரசாதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் லட்டு ஒன்று எட்டு அனாவிற்கு விற்கப்பட்டது. தற்போது பக்தர் களுக்கு சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டும், கூடுதல் லட்டு ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு அளவும் குறைந்துவிட்டது. ஆனாலும், சுவையும் மணமும் மாறாமல் திருமலையான் அருள் போலவே பக்தர்களைச் சொக்கவைக்கிறது.
இந்த திருப்பதி லட்டுக்கு ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைக்கு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது. தற்போது, 307 வயதைக் கடந்து, 308 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள திருப்பதி லட்டு பிரசாத விற்பனை மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தேவஸ்தானம் கணக்கிட்டிருக்கிறது.
புவிசார் குறியீடு
திருப்பதி லட்டை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்கும்விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டுக்கு 2008 ஆண்டு புவிசார் குறியீட்டுக்கு பதிவுசெய்தது. 2009 ஆண்டு திருப்பதி லட்டு புவியியல் அறிகுறிகள் போன்ற உணவு வகையின் கீழ் ஜி.ஐ. சட்டம் 1999 படி பதிவு செய்யப்பட்டது. இதனால் மற்றவர்கள் அதே பெயரில் இனிப்பு தயார் செய்யவும், இதன் பெயரைப் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
உலகத்தையே தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்த திருப்பதி லட்டுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவகத்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது.
உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என்று பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், திருப்பதி லட்டு என்ற பெயரில் எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே அளவில் சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறையையும் வெளியில் பிரபலப்படுத்த முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தம்.
*whatsapp குழு இணைவதற்கான லிங்க்**
No comments:
Post a Comment