Saturday, July 30, 2022

பழமொழிகளும் தவறானப் புரிதல்களும்...

பழமொழிகளும் தவறானப் புரிதல்களும்...





1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

பொருள்:-

மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.

உண்மையானப் பொருள்:-

ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையானப் பொருள்.

2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

பொருள்:-

கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.

உண்மையான பொருள்:-

'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்துப் பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

3.) ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

பொருள்:-

ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:-

ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயைப் போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

4.) களவும் கற்று மற.

பொருள்:-

தீய பழக்கமான களவு (திருட்டை)  நாம் கற்றுக் கொண்டு,  மறந்து விட வேண்டும்.

உண்மையான பொருள்:-

களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீயப்பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

5.) சேலை கட்டியப் பெண்ணை நம்பாதே...

பொருள்:-

சேலைக் கட்டும் பெண்களை நம்பாதே.

உண்மையான பொருள்:-

சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே...
சேல் என்பது கண்ணைக் குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்பக்கூடாது.

6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.

பொருள்:-

அரசனை மேல் (ஆசை) நம்பிக் கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.

உண்மையான பொருள்:-

அரசினை நம்பிப் புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தைக் குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தைச் சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை மட்டும் சுற்றுவது பயன் தராது.

7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

பொருள்:-

மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.

உண்மையான பொருள்:-

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.

8.) வர வர மாமியார், கழுதைப் போல ஆனாளாம். 

பொருள்:-

அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி  நடந்தால், இப்படி சொல்லுவார்கள்.

உண்மையான பொருள்:-

வர வர மாமியார், கயிதைப் போல ஆனாளாம்.
கயிதை என்பது ஊமத்தங்காயைக் குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும், நடப்பதும், நாளாக நாளாக கயிதைப் போல இருக்கும் என்று அர்த்தம்.

9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

பொருள்:-

ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான்.

உண்மையான பொருள்:-

கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 
1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 
2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 
4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. 

இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...